தருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: தெஹல்கா ஊடகத்தின் நிறுவனரும் ஆசிரியுமான தருண் தேஜ்பால் மீதான பாலியல்  வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.  தருண் தேஜ்பால் மீதான புகார் தீவிரமானது என்றும் பாதிக்கப்பட்டவரின் தனியுரிமை மீதான தாக்குதல் இன்றும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தருண் தேஜ்பால் மீதான பாலியல் புகார் வழக்கை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க கோவா நீதிமன்றத்திற்கு கெடு விதித்துள்ளனர்.

தருண் தேஜ்பால் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவர் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்து வழக்கு தொடர்ந்தார். கோவாவில் நட்சத்திர ஹோட்டல் லிப்டில் வைத்து  தருண் தேஜ்பால் தன்னிடம் அத்துமீறினார் என அந்த பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் விளைவாக கடந்த 2013 ஆம் ஆண்டு தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது அரசியல் பழிவாங்கல் என்று தருண் தேஜ்பால் தரப்பு வழக்கறிஞர்கள் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கோவாவில் நட்சத்திர ஹோட்டல் சி.சி.டி.வி. பதிவுகள் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் இருதரப்பு விசாரணைகளும் முடிந்து தீர்ப்பு வழங்கியுள்ள உச்சநீதிமன்றம் பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக குறியுள்ளது. 

Related Stories: