புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் பாதுகாப்பு படை அதிகாரிகள் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஓய்வு பெற்ற பாதுகாப்பு படை அதிகாரிகள், உயரதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். பேராசிரியர் ராதாகுமார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஹந்தல் ஹைதர் தயாப்ஜி, ஓய்வு பெற்ற விமான படை துணை மார்ஷல் கபில் காக், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அசோக் குமார் மேத்தா, முன்னாள் பஞ்சாப் ஐஏஎஸ் அதிகாரி அமிதாபா பாண்டே மற்றும் முன்னாள் கேரளா ஐஏஎஸ் அதிகாரி கோபால் பிள்ளை உள்ளிட்டோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.