அருண்ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி சேர்க்கப்பட்டார். அவரை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சந்தித்தனர். அதன் பின்னர், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ்வர்தன், ஜிஜேந்திர சிங் ஆகியோரும் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். கடந்த வாரம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவரை சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதனிடையே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் ஜெட்லியை சந்தித்தார். ஜெட்லியை கண்காணிக்கும் மருத்துவர் குழுவிடம் அவரது உடல்நிலைப்பற்றி கேட்டறிந்தார்.

இந்நிலையில், நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டன. அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து நுரையீரல், இருதயம் உள்ளிட்ட பிரிவுகளின் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதற்கிடையே, அருண்ஜெட்லியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் போன் மூலம் டாக்டர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். கடந்த ஆண்டு அருண் ஜெட்லிக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. அதேபோன்று கடந்த 2014ல் சர்க்கரை நோய் காரணமாக ஏற்பட்ட உடல் எடையைக் குறைக்க எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தனது உடல்நிலை காரணமாகவே அருண் ஜெட்லி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: