சென்னை : அமமுக தலைமை அலுவலகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட அமமுக பேச்சாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமமுக பேச்சாளர்கள் கூட்டம் ‘‘பேச்சாளர் பயிலரங்கம்’’ மண்டல வாரியாக நடந்து வருகிறது. அதன்தொடர்ச்சியாக ஆகஸ்ட் 15ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு, அமமுக தலைமை அலுவலகத்தில் வடசென்னை வடக்கு, வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களின் தலைமைக்கழக பேச்சாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களுடன் மேற்கண்ட மாவட்டங்களில் பேச்சாளராக விரும்பும், பேச்சுத்திறனும் கருத்துச் செறிவும் நிறைந்த உறுப்பினர்கள் பங்கேற்கலாம். அப்படி கலந்து கொண்டு தங்களின் பேச்சாற்றலை சிறப்பாக வெளிப்படுத்துபவர்கள், தலைமைக்கழக பேச்சாளர்களாக தமிழகம் முழுதும் சுற்றிவந்து அமமுக கொள்கை-கோட்பாடுகளை மக்களிடம் முன்வைத்து உரையாற்ற வாய்ப்பளிக்கப்படும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.