தமிழகத்தில் லோக் ஆயுக்தாவுக்கு 2 உறுப்பினர்களை அரசு நியமித்தது சரியே : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி : தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு லோக் ஆயுக்தாவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

முதல்வர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை 4 மாதத்தில் உருவாக்கி  அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த பிப்ரவரி 11ம் தேதி உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ்  நியமிக்கப்பட்டார். மேலும் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், நீதித்துறையை சார்ந்திராத ஓய்வு ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் மற்றும் கோவை மாவட்ட அ.தி.மு.க வழக்கறிஞர் சங்க  நிர்வாகி ஆறுமுகம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

ராஜாராம், ஆறுமுகம் நியமனத்திற்கு உயர்நீதிமன்றம் தடை

இந்த நிலையில் ராஜாராம், ஆறுமுகம் ஆகிய 2 பேரும் விதிகளுக்கு புறம்பாக லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும்  என்று கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேற்கண்ட 2 பேரின் நியமனத்துக்கு மட்டுமில்லாமல் லோக்  ஆயுக்தா தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கும் சேர்த்து தடை விதித்து உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை விசாரித்த நீதிமன்றம் உத்தரவில்,”தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம்  வழங்கியுள்ள உத்தரவிற்கு எந்த தடையும் விதிக்க முடியாது எனக்கூறி வழக்கை ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து கடந்த மே.8ம் தேதி உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஜூலை 23ம் தேதி நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளும் என உத்தரவிட்டது.

உறுப்பினர்களை அரசு நியமித்தது சரியே என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதங்கள் பின்வருமாறு :

தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் : லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை நியாயமில்லை.

தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் : லோக் ஆயுக்தா போன்ற அரசு அமைப்புகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் பணி அரசு பணி என கருத முடியாது.

நீதிபதி : தமிழகத்தில் லோக் ஆயுக்தாவுக்கு 2 உறுப்பினர்களை அரசு நியமித்தது சரியே. 2 உறுப்பினர்களின் நியமனமும் செல்லும். தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்குகிறோம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Related Stories: