உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் தமிழகத்துக்கு ரூ.1,573 கோடி மானியத்தை குறைத்த மத்திய அரசு: சிஏஜி அறிக்கை

புதுடெல்லி: உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால்  தமிழகத்துக்கு ரூ.1,573 கோடி மானியத்தை மத்திய அரசு குறைத்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், தற்போது வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தல் நடத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு சார்பில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு சுமார் 7 முறை அவகாசம் கோரப்பட்டது. தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம், தமிழக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் தனது கண்டனங்களை பதிவு செய்திருந்தது. இந்நிலையில், வருகிற அக்டோபர் இறுதி வாரத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தல் தொடபான வழக்கை முடித்து வைத்தனர்.

இதற்கிடையில், மக்களவையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் வரை தமிழகத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய இயலாது என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் கருத்தால் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மத்திய கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், 2017-18ம் ஆண்டு 14வது நிதிக்குழுவில் தமிழகத்துக்கு மொத்தம் 3,528 கோடி ரூபாய் பரிந்துரைத்து 1,955 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், உள்ளாட்சிக்கு 758 கோடி ரூபாயும், நகர்புற அமைப்புக்கு 815 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு, முழுவதும் செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18ம் ஆண்டுக்கான நிதியில் ரூ1573 கோடியை மத்திய அரசு குறைத்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய நிதிக் குழு பரிந்துரைத்தது. நிதிக்குழுவின் பரிந்துரையை மீறி மத்திய அரசு நிதியை குறைத்துள்ளது. உள்ளாட்சி தேர்தல்களை நடத்தாததால் மத்திய அரசு நிதியை குறைத்திருக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: