சென்னை: உள்ளாட்சி அமைப்பு தனி அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிப்பு மசோதாவிற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தபோதிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது. சட்டசபையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பதற்கான சட்ட மசோதாவை நேற்று முன்தினம் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். இந்த மசோதா குறித்து வில்லிவாக்கம் தொகுதி திமுக உறுப்பினர் ப.ரங்கநாதன் பேசும்போது, “இந்த மசோதாவுக்கு திமுக கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறது. கோர்ட்டில் வழக்கு இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட் கூறியிருக்கிறது. எனவே தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வர வேண்டும்” என்றார்.