புதுடெல்லி: ‘பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை, 9 மாதங்களுக்குள் வழங்க வேண்டும்,’ என அதை விசாரிக்கும் சிறப்பு நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜ மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, எம்பி வினய் கத்யார், சாத்வி ரிதம்பரா உட்பட பலர் மீது சதி குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி வரும் செப்டம்பர் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அவர் இந்த வழக்கை முடிக்க இன்னும் 6 மாதம் அவகாசம் வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இது குறித்து விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் சாட்சியங்கள் பதிவு செய்யப்படுவதை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும், தீர்ப்பை 9 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த வழக்கு முடியும் வரை, சிறப்பு நீதிபதியின் பதவிக் காலத்தை 4 வாரங்களுக்குள் உத்தரப் பிரதேச அரசு நீட்டிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.