மைசூரு: ஆடி வெள்ளியை முன்னிட்டு மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு 1001 படி ஏறி வந்த மக்களவை பாஜ எம்பி. ஷோபா கரந்தலாஜே, எடியூரப்பா மறுபடியும் முதல்வராக வேண்டும் என்று வேண்டி சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி: சட்டபேரவை கூட்டத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத முதல்வர் எச்.டி.குமாரசாமி, புறவாசல் வழியாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் உடனே பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்ல வேண்டும்.அதே போல், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பேரவை தலைவருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். முதல்வர் குமாரசாமி, காங்கிரசார் ஆகியோர் உச்ச நீதிமன்றம், மாநில ஆளுநர், ஜனநாயகத்துக்கு மதிப்பு அளிக்கவில்லை.