சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று காலை 10.14 மணி விமானத்தில் டெல்லி சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பு கேட்டிருக்கிறார். அங்கு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் கொறடா அதிகாரம் என்ன என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் விவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே ஆளுநர் அதில் தலையிட்டு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள் என்று கூறுவது சரியானது அல்ல. ஆளுநரின் இந்த நடவடிக்கை அவரது அதிகார வரம்புக்கு மீறிய செயலாகும். சட்டமன்றத்தில் விவாதங்கள் நடக்கும்போது நிதித்துறை சம்பந்தப்பட்ட பிரச்னை என்றால் மட்டும் தன்னுடைய கருத்தைக் கூறலாம். மற்ற பிரச்னைகளில் அவர் தலையிட முடியாது. ஆளுநர்கள் தங்களுடைய அதிகார வரம்பு என்ன என்பதை தெரிந்துகொண்டு செயல்பட வேண்டும். கர்நாடக ஆளுநரின் நடவடிக்கைகள் ஜனநாயக விரோத செயலாகும். எதிர்க்கட்சிகளின் ஆட்சி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இருக்கக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் நிலையான அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் பாஜ இறங்கியுள்ளது. பாஜவின் இந்த செயல் ஜனநாயகத்தை சீர் குலைக்கும் செயலாகும்.