தமிழக அரசு பள்ளிகளின் வருகைப்பதிவு கருவிகளில் இந்தி திணிப்பு: வைகோ கடும் கண்டனம்

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் வருகைப்பதிவு கருவிகளில் இந்தி திணிப்பு செய்யப்பட்டுள்ளதற்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கை: மத்திய பாஜ அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு துணை நிற்கிறது. தமிழகத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளிகள், மேல் நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் தங்கள் வருகையைப் பதிவு செய்வதற்கு கடந்த ஜூன் மாதம் முதல் ‘பயோ மெட்ரிக்’ ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.கருவியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் பெயர் விவரங்கள் பதிவாகும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. நேற்று வருகைப் பதிவை உறுதி செய்யச் சென்ற ஆசிரியர்களும், பணியாளர்களும் ‘பயோ மெட்ரிக்’ கருவிகளில் தமிழ் நீக்கப்பட்டு, இந்தி, ஆங்கிலத்தில் பதிவு பெற்ற விவரங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.‘பயோ மெட்ரிக்’ வருகைப் பதிவேடு கருவியில் தமிழ்மொழியை நீக்கிவிட்டு, இந்தியைப் புகுத்த வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? திட்டமிட்டு இந்தி மொழியை வலிந்து திணிக்கின்ற திட்டத்திற்கு தமிழக அரசின் கல்வித்துறை அனுமதி கொடுத்தது கடும் கண்டனத்துக்கு உரியது.

சென்னையில் இயங்கி வரும் மத்திய அரசின் செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தின் முத்திரை முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் தமிழுக்கு இடம் இல்லாதது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. மத்திய பாஜ அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழி திட்டத்தைப் புகுத்த முனைந்திருக்கிறது.அஞ்சல் துறை மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் தகவல் தொடர்பில் தமிழ்மொழியை நீக்கிவிட்டு, இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட்டு இருக்கிறது. இவை எல்லாம் மத்திய பாஜ அரசின் இந்தி வெறிப் போக்கை காட்டுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் அதிமுக அரசும் இந்தியை புகுத்துவது மன்னிக்க முடியாதது.

தமிழக அரசின் புதிய பேருந்துகளில் இந்தி சொற்றொடர்கள், பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு கருவியில் இந்தி என்று தமிழ்நாட்டை ‘இந்தி மயம்’ ஆக்கும் முயற்சிகள் தொடர்ந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும் என எச்சரிக்கிறேன். தமிழக அரசு உடனடியாக பள்ளிகளில் உள்ள பயோ மெட்ரிக் கருவிகளில் இந்தியை நீக்கிவிட்டு, தமிழ்மொழியை இடம்பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: