புதுடெல்லி: விரைவில் சிப் பொருத்தப்பட்ட இ பாஸ்போர்ட்கள் விநியோகிக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது: எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட இ பாஸ்போர்ட்களை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஒருவேளை சிப்பில் சட்டவிரோதமாக மாற்றங்கள் செய்தால் அது கணினியில் கண்டறியப்படும். இதனால் சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட்டுக்கு கணினியில் அங்கீகாரம் கிடைக்காது. விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விவரங்கள் டிஜிட்டல் முறையில் சிப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும். இந்த சிப்பானது பாஸ்போர்ட்டில் பதிக்கப்படும். நாசிக்கில் உள்ள இந்திய பாதுகாப்பு அச்சகத்திடம், கண்ணுக்கு புலப்படாத எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்களை தயாரிப்பதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.