சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்நாடகத்தில் ஆரோக்கிய அரசியல் நிலவவில்லை. பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு மட்டுமே ஆகும் நிலையில், 13 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுகிறார்கள் என்றால், அதன் பின்னணியில் பெரிய லாபம் இருப்பதாகத்தான் பொருளாகும். கட்சி தாவலை தடுக்க வேண்டும் என்பதற்காகதான் கட்சி தாவல் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த சட்டம் இப்போது கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. அச்சட்டத்தின்படி 3ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் அணி மாறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதை பயன்படுத்திதான் கோவாவில் 10 காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆளும் பாஜவுக்கு அணி மாறினார்கள். கர்நாடகத்தில் அணி மாறும் உறுப்பினர்களுக்கு அந்த அளவுக்கு வலிமை இல்லாததால்தான், அவர்கள் பதவி விலகி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயனடையப் போவது யார் என்பது அனைவரும் அறிந்ததே.