கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் குறைவு காரணமாக நேற்று காலை சுமார் ஒரு மணி நேரம் படகு சேவை பாதிக்கப்பட்டது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு சீசன் காலம் என்று இல்லாமல் தினசரி உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி வருகின்றவர்கள் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறை, 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இயக்கும் படகில் சென்று பார்த்து மகிழ்கின்றனர். வழக்கமாக காலை 8.30 மணிக்கு படகு சேவை தொடங்குவது வழக்கம். அதன்படி நேற்று காலை திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு செல்ல ஏராளமான சுற்றுலா பயணிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் டிக்கெட்டுக்காக காத்து இருந்தனர்.