ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் அருகே அனந்தநாக்கில் பயங்கரவாதிகளுடன் ஆன துப்பாக்கிச்சண்டையில் காயமடைந்த ராணுவ மேஜர் வீரமரணமடைந்துள்ளார். காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தின் அச்சாபல் என்ற பகுதியின் பிதூரா கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை 19 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ், ஜம்மு-காஷ்மீர் போலிஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியோர் சுற்றி வளைத்தனர். இவர்கள் அனைவரும் தீவிரவாதிகளை தப்பவிடாமல் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 3 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.