முசாபர்பூர்: பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் நோயால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது. பீகார் மாநிலம், முசாபர்பூரில் கடந்த 1ம் தேதி முதல் கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 197 குழந்தைகளும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 91 குழந்தைகளும் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 83 குழந்தைகள் உயிரிழந்தனர். கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 69 குழந்தைகளும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 14 குழந்தைகளும் இறந்தனர். முசாபர்பூர், வைஷாலி, மற்றும் மேற்கு சாம்பரன் உள்பட 12 மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.