வள்ளியூர்: நெல்லை மாவட்டம் கூடங்குளம் வளாக இயக்குநர் சஞ்சய்குமாரை தமிழக பாஜ தலைவர் தமிழிசை நேற்று அணுமின் நிலைய நகரியத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.பின்னர் அவர் அளித்த பேட்டி: கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவுகளினால் அபாயகரமான கதிர்வீச்சு பரவுகிறது என்றும் இந்தியாவிலுள்ள அனைத்து அணுமின் நிலையங்களிலிருந்தும் கழிவுகளை கூடங்குளத்தில் சேமிக்க போவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த அச்சத்தை போக்குவதற்கு விழிப்புணர்வு தேவை. கூடங்குளம் அணுஉலை செயலாக்கம் பற்றியும், அதன் கழிவுகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தேன். அணுக்கழிவுகளை இங்கேயே சேமிப்பதற்கு 2022 வரை அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது அதற்கு கால அவகாசம் உள்ளது. வெளியில் கழிவுகளை சேமிப்பதற்கு ஒரு கிடங்கு ஏற்படுத்த வேண்டும். அதற்கு உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரியிருக்கிறோம்.