அடுத்த ஆண்டு ஏப்ரலில் வர இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான இன்ஜின்களுடன் வாகனங்களை அறிமுகம் செய்வதில், மோட்டார் வாகன நிறுவனங்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. அந்த வகையில், ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனம் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான முதல் மாடலாக ஆக்டிவா 125 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய மாடலில் சாதாரண ஸ்டார்ட்டர் மோட்டாருக்கு பதிலாக ஏசிஜி ஜெனரேட்டர் மூலமாக ஸ்டார்ட் செய்யும் வசதியை ஹோண்டா கொடுத்துள்ளது. இதனால், சப்தம் இல்லாமல் இன்ஜின் ஸ்டார்ட் செய்யும் சிறப்பம்சத்தையும், ஸ்டார்ட்- ஸ்டாப் தொழில்நுட்பத்தையும் இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது. புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இருக்கும் இன்ஜின் அதிகபட்சமாக 8.4 பிஎச்பி பவரையும், 10.54 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில், சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மாசு உமிழ்வு குறைந்திருப்பதுடன், அதிக எரிபொருள் சிக்கனத்தையும் இந்த ஸ்கூட்டர் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரில் புதிய டிஜிட்டல்- அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்நேர எரிபொருள் சிக்கனம், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம் போன்ற தகவல்களை பெற முடியும்.