சென்னை: தேர்தலுக்காக பாஜ மட்டும் ரூ27ஆயிரம் கோடியை செலவழித்துள்ளது. இந்த தொகையை அவர்களால் சலுகைகள் பெற்ற பெரிய நிறுவனங்கள் வழங்கியுள்ளன என்று சீத்தாரம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இதற்கு காரணமான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். மதச்சார்பற்ற முற்போக்கு என்ற ஒரு கூட்டணியை ஸ்டாலின் உருவாக்கியதால் தான் வெற்றி கிடைத்தது. இதுபோன்ற கூட்டணியை இந்தியா முழுவதும் அமைக்க முடியாமல் போனதே பாஜ வெற்றிக்கு காரணமாக அமைந்து விட்டது. நடந்து முடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜ மட்டும் ₹27 ஆயிரம் கோடி அளவுக்கு பணம் செலவிட்டுள்ளது. இந்த பணம் எங்கிருந்து வந்தது என்றால், பெரிய நிறுவனங்களுக்கு பாஜ ஆட்சி அளித்த சலுகைகளுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அளித்த பணம் தான் இது.