சென்னை: அதிமுக ஒரே தலைமயின் கீழ் செயல்பட வேண்டும் என்ற கருத்தை வரவேற்கிறோம் என அமமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கிவிட்டு ஓபிஎஸ் - எடப்பாடி இணைந்த பிறகு ஓபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் இரண்டு தரப்பினரும் தனித்தனியாகவே செயல்பட்டு வருகின்றனர். அரசு நிகழ்ச்சிகளில் கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே திட்டங்களை தொடங்கிவைக்கிறார். இந்தநிலையில், அதிமுகவில் நீண்டகாலமாக உள்ள உட்கட்சி பூசலை வெளிப்படுத்தும் வகையில் நேற்று மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ராஜன் செல்லப்பா இரட்டை தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அப்போது அவர், ‘அதிமுகவில் ஜெயலலிதாவின் ஆளுமை யாருக்கும் இல்லை. ஆளுமை மிக்க ஒருவரது தலைமையின் கீழ் அதிமுக வரவேண்டும். இரட்டை தலைமை கூடவே கூடாது. இடைத்தேர்தல் தோல்விக்கு இந்த இரட்டை தலைமையே காரணம். அதிமுகவிற்கு பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஓபிஎஸ், எடப்பாடி அணி முழுமையாக இணையவில்லை. அதிமுகவிற்கு ஒரே தலைமை என்ற கருத்தில் உறுதியாக உள்ளேன். இதற்காக என்னை அதிமுகவில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை’ என்று திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால் அதிமுகவில் உள்கட்சி பூசல் இருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.