தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்..!

சென்னை: தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது. தமிழகம் முழுவதும் 15000 தண்ணீர் லாரிகள் ஓடுகிறது. சென்னையில் மட்டும் 5500 தனியார் தண்ணீர் லாரிகள் ஓடுகிறது. தமிழகத்தில் தற்போது வரலாறு காணாத வறட்சி நிலவி வருவதால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதற்கு குறிப்பிட்ட அளவு கட்டணம் நியமிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் அனைத்து தரப்பு மக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் மூலம் தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது. அதே நேரம் ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்களுக்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. அவர்களுக்கு தனியார் லாரிகளே பெரும்பாலும் தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர். தனியார் குடிநீர் லாரிகளை நம்பி தான் சென்னையில் மேல்தட்டு மக்களின் வாழ்க்கை ஓடுகிறது. இந்த சூழ்நிலையில், தனியார் லாரிகளை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரை வாங்கி தான் மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் லாரிகள் தண்ணீர் உறிஞ்சுவதை தடுக்க குடிநீர் வாரிய அதிகாரிகள் கடும் கெடுபிடிகள் செய்வதாக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இன்று முதல் காலவரயைற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உடன் பேச்சுவார்த்தை நடத்த நகராட்சி நிர்வாகம் உறுதி அளித்ததால் தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டது. மக்களின் சிரமத்தை மனதில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளோம் என லாரி உரிமையாளர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: