எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்காததால் பாஜவுக்கு எதிரான வாக்குவங்கி மானாவாரியாக சிதறி விட்டது

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜ தனிப்பெரும்பான்மை எண்ணிக்கையில் வெற்றி பெற்று மீண்டும் மோடி மத்தியில் ஆட்சியமைக்க இருக்கிறார். வகுப்புவாத சக்திகளை எதிர்த்துச் செயல்படும் எதிர்க்கட்சிகள் யாவும் தேசிய அளவில் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திப்பதற்கான சூழல் அமையாததால் பாஜகவுக்கு எதிரான வாக்குவங்கி மானாவாரியாகச் சிதறிவிட்டது. இந்த நிலைமைதான், மதத்தின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடும் பாஜ தலைமையிலான சங்பரிவார் கும்பலுக்கு அரும்பெரும் வாய்ப்பாக அமைந்து மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. எனினும், வட மாநிலங்களில் நிகழ்ந்ததை போல அல்லாமல் கர்நாடகாவை தவிர தென்னிந்திய மாநிலங்களில் பாஜவால் ஆதாயம் பெற இயலவில்லை.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன.  குறிப்பாக, தமிழ்நாட்டில் பாஜ- அதிமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் வலுவாகப் பாடம் புகட்டியுள்ளனர். மக்களை ஏய்ப்பதற்கென இறுதி வேளையில் அவர்களின் கூட்டணி எவ்வகையிலும் பொருந்தாக் கூட்டணி என்பதை வெகுவாக உணர்த்தியுள்ளனர். அத்துடன், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றியை வழங்கியுள்ளனர். இந்த மண் தந்தை பெரியாரின் பேருழைப்பால் பக்குவப்பட்ட சமூகநீதி மண். எனவே, இங்கே சாதி, மதவெறி சக்திகளுக்கும் அவர்களுக்கு துணை நிற்கும் எவருக்கும் இடமில்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. பணமதிப்பு அழிப்பு, நீட், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் ஆலை போன்றவற்றை எதிர்த்து மோடிக்கு எதிராக திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாகப் போராடியதன் விளைவாக இங்கே மோடி எதிர்ப்பு அலை படிப்படியாகக் கட்டமைக்கப்பட்டது.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரையில், அனைத்துத் தரப்பு வாக்காளப் பொதுமக்களும் எனக்களித்த வெற்றியின் மூலம், எனக்கெதிராக சாதி, மதவெறி சக்திகள் திட்டமிட்டு பரப்பிய அவதூறுகளையெல்லாம் முறியடித்துள்ளனர். எனவே, இந்த வெற்றியை சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் யாவருக்கும் காணிக்கையாக்குகிறேன். அத்துடன், திமுக கூட்டணிக்கு வரலாறு காணாத வகையில் பெரு வெற்றியை வழங்கிய பொதுமக்களுக்கும், திமுக கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: