விருதுநகர்: எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் விவகாரங்களில், கூட்டணிக்காக பாமக தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்காது என கூறியதற்கு பதிலடியாக, அதிமுகவும் கூட்டணிக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்காது என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். மக்களவை மற்றும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணிக்கட்சிகள் சார்பாக பங்கேற்க உள்ள முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தார். அதிமுக, பாஜ, பாமக, தேமுதிக முகவர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அளித்த பேட்டி: அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களை மீண்டும் எடுப்பதற்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம் என்று பாமக கூறியுள்ளது. தமிழகத்தில் எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் மக்களின் கருத்துக்களை கேட்டப்பிறகே செயல்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மக்களின் மனநிலைக்கு எதிராக தமிழக அரசு செயல்படாது, மக்களின் முடிவை கேட்டு செயல்படுத்தப்படும்.