சென்னை: ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு உணவிற்காக, பாதுகாப்பற்ற முறையில் லாரிகளில் ஏற்றி சென்ற மாடுகளை மதுராந்தகம் போலீசார் மடக்கி பிடித்தனர். லாரிகளை பறிமுதல் செய்து, மாடுகளை கோ-சாலையில் ஒப்படைத்தனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் வழியாக ஆந்திராவில் இருந்து, கேரளாவுக்கு உணவுக்காக பாதுகாப்பற்ற முறையில் மாடுகள் லாரிகளில் ஏற்றி செல்வதாக மதுராந்தகம் போலீசாருக்கு, விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் மூலம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், நேற்று மாலை பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்த 4 லாரிகளை, போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 200க்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தது தெரியவந்தது.