சந்திரசேகர ராவ் விவகாரம் பொய் சொல்லக் கூடாது பாப்பா: தமிழிசைக்கு முத்தரசன் அறிவுரை

சென்னை, மே 16:  திமுக தலைவர் குறித்த தமிழிசையின்  இக்கருத்து பாரதியார் பாடிய ‘பொய் சொல்ல கூடாது பாப்பா’ என்ற மகத்தான பாடல்  வரிகள்தான் நினைவுக்கு வருகிறது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பின்னர், தோல்வியை ஒப்புக்கொண்டு, காணாமல் போன பாஜ தலைவர் தமிழிசை, அதிமுகவின் நிர்ப்பந்தம், நெருக்கடியால் நான்கு தொகுதிகளிலும் பிரசாரம் செய்து வருகிறார். இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதியிலும்  திமுகவின் வெற்றி உறுதிபட்டதை நன்கறிந்த தமிழிசை, தன்னை மக்கள் மறந்து விடாமிலிருக்க பரபரப்பு செய்திகளையும், கருத்துக்களையும் கூறி வருவது வாடிக்கையாகி விட்டது.

 கடந்த இரண்டு ஆண்டுகளாக, திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் மோடி மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதில் கொள்கை அடிப்படையில் உறுதியாக இருந்து, இயக்கங்களை முன் எடுத்தது. அதில் திமுக தலைவர் அரசியல் ரீதியாக கடும் விமர்சனங்களை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மீது முன் மொழிந்ததையும் அனைவரும் நன்கறிவர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜவோடு பின்வாசல் வழியாக பேசி வருவதாக தமிழிசை கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது சிறிதும் அரசியல் நாகரிகமற்ற பேச்சு என்பதோடு, கடைந்தெடுத்த பொய் என்று சுட்டிக் காட்டுகிறோம்.  திமுக தலைவர் குறித்த தமிழிசையின் இக்கருத்து பாரதியார் பாடிய ‘பொய் சொல்ல கூடாது பாப்பா’ என்ற மகத்தான பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

Related Stories: