வேலூர்: தமிழகத்தில் நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவ, மாணவிகளை தீவிரவாதிகளை போன்று சோதனை நடத்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்தார்.வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மார்க்சிய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் அதிலிருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு தலைமையில் நேற்று நடந்தது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மக்களவை தேர்தல், நடந்து முடிந்த 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் நடைபெறவுள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
தோல்வி பயத்தால் மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களை அதிமுகவினர் தகுதி நீக்கம் செய்ய உள்ளனர். இதற்காக சபாநாயகர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மூன்று எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.