சென்னை: அமமுகவுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. எங்களை தகுதி நீக்கம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் கூறியுள்ளனர். இதுகுறித்து சென்னையில் நேற்று இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொறடா ராஜேந்திரன் எங்கள் மீது சில குறைகளை கூறி சபாநாயகருக்கு ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். அதன்மூலம் எங்களுக்கு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட கடிதம் நேற்று கிடைத்தது. அந்த கடிதத்தை படித்து பார்த்து கூடியவிரைவில் தக்க பதிலை வழங்குவோம். சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்திருக்கிறது. நம்பிக்கை இல்லா தீர்மானம் சபாநாயர் மீது வருகின்ற போது எந்த சட்டமன்ற உறுப்பினர் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க கூடாது என்பது சட்டவிதி. அதை முன்னுதாரணமாக கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. வரும் 6ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். சபாநாயகர் கேட்டுள்ள விளக்கம் எந்தவிதத்திலும் எங்களை கட்டுப்படுத்தாது. டிடிவி.தினகரன் தனி அணியாக செயல்படலாம் என்று நீதிமன்றம் கூறியதையடுத்து நாங்கள் டிடிவி.தினகரனுடன் இணைந்து செயல்பட்டோம். ஆனால், டிடிவி.தினகரன் அதை ஒரு கட்சியாக பதிவு செய்த பிறகு அதில் நாங்கள் இல்லை. கட்சியில் எந்த பொறுப்பிலும் நாங்கள் இல்லை.