ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நேற்று திமுக வேட்பாளர் சண்முகையா உள்பட 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது. முதல் இரண்டு நாட்கள் யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில் நேற்று முன்தினம் சுயேச்சைகள் 5 பேர் மனுதாக்கல் செய்தனர். 5ம் நாளான நேற்று திமுக வேட்பாளர் சண்முகையா உள்பட 8 பேர் தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுகவின் மாற்று வேட்பாளராக அவரது உறவினர் அயிரவன்பட்டியைச் சேர்ந்த விஜி(36) வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆஸ்டின், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மதிமுகவைச் சேர்ந்த புதுகோட்டை வக்கீல் செல்வம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சண்முகம், கன்னியாகுமரி எம்எல்ஏ ஆஸ்டின் ஆகியோர் உடன் இருந்தனர்.