சென்னை: தன்னுடைய தொகுதியிலேயே தனக்கு எதிரான நடவடிக்கையில் கட்சியினர் ஈடுபட்டதால் ஓசூர் அமமுக வேட்பாளர் புகழேந்தி கடும் அதிருப்தியை அடைந்துள்ளார். அதிமுகவில் கர்நாடகா மாநில செயலாளராக இருந்தவர் புகழேந்தி. இவர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரிய நபராக இருந்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா அணியில் இணைந்தார். பின்னர், அவர் சிறை சென்ற பிறகு டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக ஈடுபட்டு வந்தார். அமமுகவை ஆரம்பித்த பிறகு கட்சியை பலப்படுத்தி வந்தார்.இந்நிலையில், அமமுகவில் கர்நாடகா மாநில செயலாளர் பொறுப்பாளரகவும், கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி பொறுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, ஓசூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அவர் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால், அவர் பிரசாரம் செய்யும் போது உட்கட்சி உறுப்பினர்களே அவருக்கு ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டனர். ஓசூர் ஒன்றிய செயலாளரும் எதிரணியிருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பிரசாரத்திற்கு யாரும் வருவதில்லை எனவும் அமமுகவின் தலைமைக்கு புகழேந்தி புகார் தெரிவித்துள்ளார். ஆனால், தினகரன் நடவடிக்கை எடுக்கவில்லை. . இருந்தாலும் புகழேந்தி தன்னுடைய ஆதரவாளர்களை மட்டும் முன்னிருத்தி பிரசாரத்தை மேற்கொண்டு வந்துள்ளார். இதேபோல், தருமபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பி.பழனியப்பனின் ஆலோசனைக்கு இணங்க புகழேந்தி செயல்பட வேண்டும் என்று அமமுக தலைமை கூறியதால் அவர் பழனியப்பனை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், அவரின் தொலைபேசி அழைப்புகளை எடுப்பதில்லை என்பதால் தேர்தல் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், பிரசாரத்தை மேற்கொள்வதிலும் தொடர்ந்து புகழேந்திக்கு சிக்கல் ஏற்பட்டது.