தேர்தல் நடைமுறை சட்டத்திற்கு எதிராக, சபரிமலை ஐயப்பன் பெயரை பிரசாரத்தில் பயன்படுத்திய திருச்சூர் பாஜ வேட்பாளர் நடிகர் சுரேஷ்கோபிக்கு, தேர்தல் அதிகாரியான கலெக்டர் அனுபமா விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தேர்தலுக்கு பயன்படுத்த அரசியல் கட்சிகள் திட்டமிட்டன. ஆனால் வழிபாட்டு தலங்களையோ, சபரிமலை ஐயப்பன் கோயில் பெயரையோ தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா கூறியிருந்தார்.
இதை ஏற்க முடியாது என்றும், சபரிமலை ஐயப்பன் விவகாரம் குறித்து தேர்தலில் பேசுவோம் என்று பாஜ கூறியிருந்தது. இந்த நிலையில் திருச்சூர் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் நடிகரும், ராஜ்யசபா எம்பியுமான சுரேஷ்கோபி நேற்று முன்தினம் திருச்சூர் தேக்கின்காடு மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சபரிமலை ஐயப்பன் மக்களின் உணர்வாக உள்ளார். கேரளாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பாக அலை வீசும். சபரிமலை விவகாரத்தால் கோடிக்கணக்கான பக்தர்கள் மனம் புண்பட்டு உள்ளது. அதில் நானும் ஒருவன். அதன் அடிப்படையில் தான் நான் ஓட்டு கேட்கிறேன். சபரிமலையை நான் தேர்தல் ஆயுதமாக பயன்படுத்தவில்லை. ஆனால் கேரளாவில் உள்ள அனைத்து குடும்பங்களும் இதுகுறித்து தான் விவாதித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.