திருச்செங்கோடு: எடப்பாடி பழனிசாமியும், தங்கமணியும் தமிழகத்தை அடகு வைத்து விட்டதாக, திருச்செங்கோட்டில் நடந்த பிரசார கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசினார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே, நாமக்கல் மக்களவை அமமுக வேட்பாளர் சாமிநாதனை ஆதரித்து, கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது: ஜெயலலிதா இருந்த வரை மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் கொண்டு வர விடவில்லை. ஆனால், அவர் மறைவிற்கு பிறகு, அனைத்து திட்டங்களையும் இன்று கொண்டு வந்துள்ளார்கள். நமக்கு ஒரு கஷ்டம் என்று வந்தால், வீட்டில் இருக்கும் நகைகளையோ அல்லது நில புலன்களையோ அடகு வைப்போம். ஆனால், எடப்பாடி பழனிசாமியும், தங்கமணியும் தங்கள் கஷ்டத்திற்கு தமிழ்நாட்டையே அடகு வைத்து விட்டார்கள். எம்ஜிஆர் தோற்றுவித்து, ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவை, டெல்லியில் அடகு வைத்து விட்டார்கள்.