புதுடெல்லி: அமலாக்கத்துறை தன் மீது தொடர்ந்துள்ள பணமோசடி வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா மனுத்தாக்கல் செய்துள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள 18 கோடி மதிப்புள்ள சொத்தை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா முறைகேடாக வாங்கியதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் வதேராவின் உதவியாளர் மனோஜ் அரோரா மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம் வதேராவை வரும் 25ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்த நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள பணமோசடி வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வதேரா நேற்று மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு வரும் 25ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி