வாக்குகளை வாங்க காசு கொடுப்பது, இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல. நாடு சுதந்திரமடைவதற்கு முன்பே தொடங்கி விட்டது என்கிறார்கள். என்ன அப்போது எதிர்கட்சிகாரர்களுக்கும், வாக்களிக்க யோசிப்பவர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் தருவார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி விட்டது. எல்லோரும் கொடுக்கிறார்கள், எல்லோரும் வாங்குகிறார்கள். அதற்கு எப்படியாவது வாக்களித்தால் போதும் என்ற வேட்கைதான் காரணம். காசு வாங்கிட்டு ஓட்டு போடா விட்டால்? என்ற கேள்விக்கே இடமில்லை. தேர்தல் நாள் வரை நம்பிக்கைதான் வாழ்க்கை. ஆனால் அந்த காலத்தில் வேட்பாளர்கள் அதற்கு ஒரு ‘டெக்னிக்’ வைத்திருந்தார்கள். பணம் பட்டுவாடா செய்பவர் கையில் பால் சொம்பு வைத்திருப்பார். ஒவ்வொரு வீட்டிலும் வாக்காளர்களின் எண்ணிக்கையை பார்த்து காசு கொடுப்பார். கூடவே கையில் வைத்திருக்கும் பால் சொம்பை நீட்டுவார். காசு வாங்கியவர் பால் சொம்பு மீது கை வைத்து, ‘நீங்க சொன்னவருக்குதான் ஓட்டு போடுவேன்’ என்று சத்தியம் செய்வார்கள்.