உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான சிங்கவால் குரங்குகள் உள்ளன. இவை வனப்பகுதியில் உள்ள உயரமான மரங்களில் துளிர்க்கும் குறுந்தளிர், பூக்கள் மற்றும் காய், கனிகளை தின்று வசித்து வருபவை. சமீப காலமாக கடும் வெயில் காரணமாக வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகளில் இலைகள் காய்ந்து உதிர்ந்து வருகின்றன. மேலும் நீரோடை, அருவிகளும் வற்றியதால் குரங்குகள் உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதிகளில் இருந்து கூட்டம், கூட்டமாக வெளியேறி வருகின்றன. இவ்வாறு வெளியேறும் சிங்கவால் குரங்குகள் அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட உடுமலை மூணாறு செல்லும் சாலையில் ஒன்பதாறு செக்போஸ்ட் மற்றும் சின்னாறு பகுதிக்கு வந்து சாலையோரம் காத்திருக்கின்றன.