கோவை: பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழக அரசு உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாக ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய பாஜக அரசு கடைபிடித்த பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற பொருளாதார கொள்கைகளால் ஒட்டுமொத்த தேசமும் கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில் பஞ்சாலைகள், பம்ப்செட், உதிரிபாக உற்பத்தி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை திறப்பதற்கும், புதிதாக தொழில் துவங்குவதற்கும் எங்களுடைய வேட்பாளர் முயற்சி மேற்கொள்வார். கோவை மாநகர பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கவும், குடிநீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுப்போம்.