சென்னை: சட்டபல்கலைகழக துணைவேந்தர் ஆளும்கட்சி எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து கட்சிக்காரரை போல் செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப் பல்கலைக் கழகத்தில் பதிவாளராக பணியாற்றிய டி.சங்கர் என்பவர், தன்னை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் பதில் மனுக்களாக தாக்கல் செய்ய பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, பல்கலைக் கழக பொறுப்பு பதிவாளர் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தனி நீதிபதி, வழக்கின் எல்லையை மீறி தன் விருப்பம் போல உத்தரவுகளை பிறப்பித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து, அவருக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.