புதுடெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், கமிஷன் பணத்தில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாங்கிய சொத்துக்களை முடக்கும் முயற்சியில் சிபிஐ, அமலாக்கத்துறை இறங்கியுள்ளன. விவிஐபி.க்களின் பயணத்துக்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்களை, ரூ.4,500 கோடிக்கு வாங்க கடந்த 2010ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் உட்பட 3 பேர் தரகர்களாக செயல்பட்டுள்ளனர். இவர்கள் மொத்தம் ரூ.423 கோடி கமிஷனாக பெற்று பலருக்கு பகிர்ந்து அளித்துள்ளனர். கிறிஸ்டியன் மைக்கேல் மட்டும் ரூ.225 கோடி கமிஷன் பெற்றுள்ளார். இத்தகவல் அம்பலமானதும் இந்த ஒப்பந்தம் கடந்த 2014ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் கடந்த மாதம் 4ம் தேதி கைது செய்யப்பட்டு, இந்தியா கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டார்.