சென்னை: டிஎன்பிஎஸ்சி சார்பில் அடுத்த மாதம் நடத்துவதாக இருந்த நூலகர் தேர்வுக்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த மாதம், 11ம் தேதி நடத்தப்பட்ட தொகுதி 2க்கான முதனிலைத் தேர்வின் முடிவுகள், கடந்த 17ம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் அதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு, 23.02.2019 அன்று நடத்தப்படவுள்ளது.இந்நிலையில், தொகுதி 2க்கான முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறவிருக்கும் அதே நாளில் (23.02.2019) ஏற்கனவே நடைபெறுவதாக தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளில் நிரப்பப்பட வேண்டிய நூலகர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினையும், அதே போல் 24.02.2019 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தொல்பொருளியல் துறையில் நிரப்பப்பட வேண்டிய நூலகர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை மாற்றுத்தேதியில் நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.