செந்தில்பாலாஜி மட்டுமின்றி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் தி.மு.க.வில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

கரூர்: செந்தில்பாலாஜி மட்டுமின்றி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் தி.மு.க.வில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. கரூரை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் டி.டி.வி. தினகரனுடன் இணைந்து செயல்பட்டார். சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான அவர் மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த இருவார காலமாக செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளில் மாற்றம் தென்பட்டது. பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்த பின்னர் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைய போவதாகவும், அக்கட்சி தலைமையுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருகிற 16-ந்தேதி சென்னையில் நடைபெறும் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இணைந்த பின்னர் கரூருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வரவழைத்து மிக பிரமாண்டமான முறையில் இணைப்பு விழாவினை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறார். பெரும்பாலான நிர்வாகிகள் அவருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். ஆளுங்கட்சியை எதிர்த்து அரசியல் செய்ய தி.மு.க.தான் சரியான களம் என ஆதரவாளர்கள் பலரும் கூறியுள்ளனர். இருந்தபோதிலும் தினகரன் சமாதானம் செய்ய முயற்சி செய்து வருகிறார். நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கரூர் வந்தார். அவர் செந்தில் பாலாஜியை சந்தித்து பேசி விட்டு சென்றார். அவர் செந்தில் பாலாஜியை சமாதானம் செய்ய வந்தாரா? அல்லது அவரும் தி.மு.க. பக்கம் சாய்கிறாரா? என்று கேள்வி எழுந்தது.

இதுபற்றி பழனியப்பன் கூறும் போது, செந்தில் பாலாஜியை நேற்று முன் தினம் மட்டுமல்ல, சென்னையில் பல முறை சந்தித்து பேசியுள்ளேன். அதேபோலத் தான் தற்போதைய சந்திப்பும். அதற்காக அ.ம.மு.க.வை விட்டு விலகுகிறேன் என்பது ஒரு கதை என்று கூறினார். ஒருவரை சந்தித்ததால் அவருடன் செல்வேனா? இது சுத்த பொய் என்றார். இந்தநிலையில் அ.ம.மு.க. கட்சியின் மாநில பொருளாளர் தஞ்சை ரங்கசாமி நேற்று செந்தில் பாலாஜியை சமாதானப்படுத்துவதற்காக வந்திருந்தார். நீண்ட நேரம் அவர் செந்தில்பாலாஜி அலுவலகத்தில் காத்திருந்தார். ஆனால் செந்தில்பாலாஜி வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். இதனால் சமாதான முயற்சி தோல்வி அடைந்துள்ளது. கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த செந்தில்பாலாஜி அசைக்க முடியாத அளவுக்கு பலத்துடன் திகழ்ந்து வந்தார். மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் நன்மதிப்பை பெற்று திகழ்ந்து வந்த அவர், கரூர் மாவட்ட அ.தி.மு.க. வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். இதனால் ஜெயலலிதா அவருக்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வழங்கினார். அதற்கேற்றாற் போல் அவரும் செயல்பட்டு தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெற உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: