சென்னை: வாடகைக்கு எடுத்துச்சென்ற 80 லட்சம் மதிப்பு கேமராவுடன் தலைமறைவாகிவிட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் கேமரா மற்றும் லென்ஸ்களை வாடகைக்குவிடும் கடை நடத்தி வருகிறார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சையதுஅலி என்பவர் கடந்த 5 மாதத்துக்கு முன் ரூ.80 லட்சம் மதிப்பிலான கேமரா மற்றும் லென்ஸ்களை மலேசியாவில் நடைபெறும் படப்பிடிப்புக்காக வாடகைக்கு எடுத்து சென்றுள்ளார். இதன்பின்னர் அவரை பலமுறை கோபி தொடர்புகொண்டபோது முடியவில்லை. இதனிடையே கேமரா மற்றும் லென்சுடன் சையது அலி தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கோபி புகார் கொடுத்தார். இதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.