ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆண்டில் வரும் 30ம் தேதிக்குள் இந்த சான்றை சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வங்கிக்கு அல்லது கருவூலத்துக்கு நேரில் சென்று விண்ணப்பம் அளிக்க வேண்டிய நடைமுறை முன்பு இருந்தது. இதனால் ஓய்வூதியர்கள் பல சிரமங்களை சந்தித்தனர். இதை எளிதாக்கும் வகையில் 2014 நவம்பர் 10ம் தேதி ஜீவன் பிரமான் என்ற டிஜிட்டல் உயிர்ச்சான்று நடைமுறையை பிரதமர் துவக்கி வைத்தார். இதன்மூலம் வீட்டில் இருந்து கூட ஸ்மார்ட் போன் மூலம் சான்று சமர்ப்பிக்க முடியும். ஆதார் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீட்டுக்கு அருகில் உள்ள பொது சேவை மையங்களில் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து கைரேகை அல்லது கண் கருவிழி ஸ்கேன் செய்து உயிர்ச்சான்று சமர்ப்பிக்கலாம். அப்போது பென்ஷன் எண், கருவூலம், வங்கி கணக்கு விவரங்களை அளிக்க வேண்டி வரும். வங்கி கிளைகளிலும் டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கும் வசதிகள் உள்ளன.