அட்சயதிருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள 45,000 சிறு மற்றும் பெரிய நகைக்கடைகள், சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் அனைத்தும் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கே திறக்கப்பட்டது. சென்னையை பொறுத்தவரை நகைக்கடைகள் அதிகமாக உள்ள தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை, போரூர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி வரை கடைகள் திறந்திருந்தன. நகைக்கடைகள் இருந்த பகுதிகள் அனைத்தும் திருவிழா கூட்டம் போல மக்கள் வெள்ளத்தில் திக்குத் திணறியது.
இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: அட்சய திருதியை இந்தாண்டு மிக சிறப்பாக இருந்தது. மக்கள் ஆர்வத்துடன் வந்து நகைகளை வாங்கி சென்றனர். விற்பனை என்பது கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 30 சதவீதம் வரை கூடுதலாக நடைபெற்றுள்ளது. முன்பதிவும் சிறப்பாக நடந்துள்ளது. இந்தாண்டு விற்பனையில் 80 சதவீதம் ஆபரண நகைகளும், 20 சதவீதம் நாணயங்களாகவும் விற்பனையாகியது. இவ்வாறு அவர் கூறினார். கடந்தாண்டு அட்சய திருதியை அன்று தமிழகத்தில் 20 டன் அளவுக்கு தங்கம் விற்பனையானது. இவற்றின் மதிப்பு சுமார் 11 ஆயிரம் கோடி. அதேபோல இந்தாண்டு அட்சயதிருதியையில் கூடுதலாக 30 சதவீதம் விற்பனை நடந்துள்ளது. அதாவது, 25 டன் அளவுக்கு தங்கம் விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு சுமார் 14 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
அட்சயதிருதியையான நேற்றைய முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 வரை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,160க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலையில் சற்று மாற்றம் காணப்பட்டது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,000க்கு விற்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும்.
The post அட்சயதிருதியை முன்னிட்டு ரூ.14,000 கோடிக்கு நகைகள் விற்பனை: நகைக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் appeared first on Dinakaran.