திருமலை: விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டிருப்பதை டிரோன் கேமரா மூலம் ஆந்திர அரசு கண்டுபிடித்துள்ளது. ஆந்திராவின் அரக்கு வனப்பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்படும் கஞ்சா அங்கிருந்து கடத்தப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. அரக்கு வனப்பகுதியில் விளைவிக்கப்படும் கஞ்சாவை பயிர் செய்வது, கடத்தலுக்கு தேவையான வாகனங்களை ஏற்பாடு செய்வது, வனப்பகுதியில் இருந்து கஞ்சாவை பாதுகாப்பாக கொண்டு வந்து வாகனங்களில் ஏற்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைப்பது, அவற்றை மொத்தமாக வாங்கி சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது என்று பல்வேறு பணிகளில் மாபியா கும்பல் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அரக்கு வனப்பகுதியில் நடைபெறும் கஞ்சா சாகுபடியை முற்றிலும் ஒழித்துக் கட்ட அரசு முடிவு செய்தது. ஆந்திர மாநில அரசு இதற்காக நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த தொடங்கி உள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநில அரசு செய்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு சேவைகளை வழங்கி வரும் ரியல் டைம் கவர்னன்ஸ் மூலம் அரக்கு வனப்பகுதியில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளை டிரோன் கேமராக்கள் மூலம் துல்லியமாக கண்டுபிடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.