சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று தெலங்கானாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க சந்திரசேகரராவ் சிறப்பு யாகம்

திருமலை: தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க  அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் 2 நாள் சிறப்பு யாகம் நடத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ். அம்மாநிலத்தில் முன்கூட்டியே சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் விதமாக தனது அமைச்சரவையை கலைத்தார். இதையடுத்து தற்போது இடைக்கால முதல்வராக சந்திரசேகர ராவ் இருந்து வருகிறார். தெலங்கானாவில் டிசம்பர் மாதம் தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதற்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் கஜ்வேல் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக முதல்வர் சந்திரசேகரராவ் அத்தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், தேர்தலில் தங்களது கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக சந்திரசேகரராவ் ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் 2 நாள் சிறப்பு யாகத்தை நேற்று முன்தினம் தொடங்கினார்.

விசாகப்பட்டினம் சாரதா பீட பீடாதிபதி சொரூபானந்த சுவாமி தலைமையில் தொடங்கிய இந்த யாகத்தை 75 ருத்விக்குகள் பங்கேற்று நடத்தி வருகின்றனர். இதில் சூரிய நமஸ்காரம், நவக்கிரக யாகம், சண்டியாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாகத்தில் சந்திரசேகர் ராவ், அவரது மனைவி ஷோபா மற்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். ஆட்சியை பிடிக்க முதல்வரே தனது வீட்டில் யாகம் நடத்திய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: