புதுடெல்லி: அடுத்த பொது தேர்தலுக்கு முன் இறுதியாக நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் டிசம்பர் 11ம் தேதி தொடங்கி ஜனவரி 8ம் தேதி வரை 20 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். ஆனால் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாக இந்த ஆண்டு தாமதம் ஆனது. இந்த கூட்டத்தை டிசம்பர் 11ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு நேற்று முன்தினம் இரவு பரிந்துரை செய்தது. இது அடுத்த மக்களவை தேர்தலுக்கு முன் நடைபெறும் மோடி அரசின் கடைசி கூட்டத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11ம் தேதி அன்று வெளியாகவுள்ளன. அன்றைய தினம் குளிர்க்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆளும் பாஜ கட்சியும், காங்கிரசும் இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளது. எனவே, தேர்தல் முடிவுகளும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதிபலிக்கலாம் என கூறப்படுகிறது.