மும்பை: எக்ஸ்பிரஸ் ரயிலை நடுவழியில் நிறுத்திவிட்டு அந்த ரயிலின் டிரைவர் கீழே இறங்கி சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் காலை 10.30 மணியளவில் திடீரென வசாய் அருகே நிறுத்தப்பட்டது. சிக்னல் இருந்தும் ரயில் ஏன் நடுவழியில் நிறுத்தப்பட்டது எனத் தெரியாமல் பயணிகள் குழம்பிப் போனார்கள். அப்போது, வசாய் பகுதியில் ரயில்வே பாதை அருகே ஓட்டல் நடத்தி வரும் எச்.எஸ்.தொசானி என்பவர் அந்த வழியாக நடந்து சென்றார். அவர் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதையும் அந்த ரயில் டிரைவர் கீழே இறங்கி சிறுநீர் கழிப்பதையும் பார்த்தார்.