சென்னை: பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நாலாயிர திவ்விய பிரபந்தம் பாடுவதில் பாகுபாடு இன்றி பிராமணர் அல்லாதவர்களையும் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தியும், இந்து அறநிலைத் துறை ஆணையர் உத்தரவை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், திருக்கச்சி நம்பி திருமாலடியார் சேவை சங்கமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நேற்று வரதராஜ பெருமாள் கோயில் எதிரில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் சன்னதி உட்பிரகாரத்தில் பிராமணர்கள் மட்டுமே நாலாயிர திவ்விய பிரபந்தம் பாட அனுமதிக்கப்படுகிறது. பிராமணர் அல்லாத வைணவர்கள் சன்னதி வெளியில் இருந்தே பிரபந்தம் பாடமுடியும். இந்த பாகுபாட்டை நீக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த நவ.9ம் தேதி வைணவர்கள் கலெக்டர் அலுவலக வாயிலில் தரையில் அமர்ந்து நாலாயிர திவ்விய பிரபந்தம் பாடினர். இதனைத் தொடர்ந்து நேற்று வரதராஜ பெருமாள் கோயில் எதிரில் வைணவர்கள் பாகுபாடு இல்லாமல் அனைவரையும் நாலாயிர திவ்விய பிரபந்தம் பாட அனுமதிக்க வலியுறுத்தி தரையில் அமர்ந்து நாலாயிர திவ்விய பிரபந்தம் பாடினர்.