பெங்களூரு : ஜனவரி மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ள சந்திராயன் - 2 விண்கலத்தின் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திராயன்-2 விண்கலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது. நிலாவை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட உள்ள சந்திராயன்-2 விண்கலம் தயாரிப்பின் முக்கிய அம்சங்கள் நிறைவு பெற்றுவிட்டன. இந்த விண்கலம், ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.3 மூலம் அடுத்த ஆண்டு விண்ணில் பாய உள்ளது. இதற்கு மிக முக்கியமாக இன்ஜின் சி.இ.20 தேவை. இந்த இன்ஜின் செயற்கைக்கோள் இயக்கத்தின் மிக முக்கிய பணிகளை மேற்கொள்கிறது. திரவ ஆக்சிஜனுடன் இணைந்து வாயுவை உற்பத்தி செய்கிறது. மேலும், திரவ ஹைட்ரஜன் உற்பத்தி செய்யவும் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான இன்ஜின் சி.இ.20 மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்து வளாகத்தில் தயாராகி வருகிறது.