திருமலை: ஆந்திராவில் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏவை சுட்டுகொன்ற சம்பவத்தை தொடர்ந்து 4 மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் பதுங்கியிருந்த 7 மாவோயிஸ்ட்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளை கொல்ல திட்டமிட்டிருப்பது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ சர்வேஸ்வரா ராவ், முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா. இவர்கள் நேற்று முன்தினம் அரக்கு தொகுதிக்குட்பட்ட விவிடிபுட் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றனர். அப்போது மாவோயிஸ்ட்கள் திடீரென சரமாரி துப்பாக்கி சூடு நடத்தி இருவரையும் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவத்திற்கு அமெரிக்க சுற்றுப்பயணத்தில் உள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் சம்பவத்தில் புலனாய்வுத்துறை தோல்வியடைந்துள்ளதாகவும், இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்கும்படி அமெரிக்க பயணத்தில் இருந்த ஆந்திர டிஜிபி ஆர்.பி.தாகூருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். இதனால் டிஜிபி ஆர்.பி.தாகூர் தனது சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு அமெரிக்காவில் இருந்து ஐதராபாத் வழியாக விசாகப்பட்டினத்திற்கு இன்று மாலை வருகிறார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி காவல்துறை சார்பில் மாவோயிஸ்ட்கள் மூலமாக ஆபத்து இருப்பதாக எம்எல்ஏ சர்வேஸ்வரராவுக்கு எச்சரிக்கை கடிதத்தை போலீசார் வழங்கியுள்ளனர். ஆனால் அதனை பெற்ற அவர், அலட்சியமாக இருந்துவிட்டதால் நேற்று முன்தினம் மாவோயிஸ்ட்களால் உயிரிழந்துள்ளார்.