புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் - பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே இடையே ரகசிய தொடர்பு இருக்கலாம் என சந்தேகத்தை கிளப்பி உள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘‘ரபேல் ஒப்பந்தம் ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை’’ என பதிலடி கொடுத்திருப்பது பரபரப்பாகி உள்ளது.‘ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனம் சேர்க்கப்பட்டதற்கு இந்திய அரசுதான் காரணம்’ என பிரான்சின் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தில் ரூ.1.30 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இந்திய பொருளாதாரத்தில் பிரதமர் மோடி ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தி இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.பூதாகரமாக வெடித்துள்ள இவ்விவகாரம் குறித்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘ஆச்சரியமாக இருக்கிறது... ரபேல் விவகாரத்தில் பிரான்சில் குண்டு வெடிக்கப் போகிறது’ என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டார். அதைத் தொடர்ந்து ஹாலண்டே சர்ச்சைக்குரிய கருத்தை கூறி, பின்னர் அவரே தனது கருத்துக்கு முரண்பாடாக பேசியிருக்கிறார். ஹாலண்டே பேசப்போவது ராகுலுக்கு எப்படி தெரிந்தது? இந்த தொடர்புக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், மனதில் ஏதோ ஒரு சந்தேகத்தை கிளப்புகிறது. என்னமோ நடந்திருக்கிறது. அதனால்தான், 20 நாட்கள் முன்பாகவே ராகுலால் சரியாக கணித்திருக்க முடிந்திருக்கிறது’’ என கூறியிருக்கிறார்.‘2019ல் மக்களவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், சர்ச்சையாகி உள்ள ரபேல் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வாய்ப்புண்டா?’ என்ற கேள்விக்கு அவர், ‘‘ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. நமது பாதுகாப்பு படைக்கு இவ்விமானங்கள் அவசியத் தேவையாக உள்ளன. எனவே, நிச்சயம் வாங்கப்படும்’’ என்றார். இதனிடையே, அருண் ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்திலும் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.